இத்தாலி வாழ் தமிழர்களின் படைப்புக்கள்

கவிதைகள்

 

01. ஈரநிலத்தின் இரவுப் பாடல்...

02. காதலர் தினத்தில் கசிந்திடும் நினைவுகள்...

03. உண்மை புரியாமல் பொழுது விடியாது...

04. இளவேனிற்காலம் (இத்தாலியின் குறிஞ்சி நிலம் )

05. புரியாத காதல் இணையாது!

06.  வாழ்க வளர்கவே!

07. நடைபாதைப் பெருவெளியில்...

08. கோரத்தாண்டவம் முடிந்த சில பொழுதுகள்...!

09.  பொங்கலில் பொங்குதுவே

10. தமிழீழ தேசத்தின் உழைக்கும் மங்கை ( கடலில் )

11.  உழைப்பால் உயர்வு வரும்...

12. புத்தாண்டே வாழ்க

13. ஒரு பௌர்ணமிப் பொழுது...

14. தமிழே..........!!  தமிழே..........!!

15. மண்ணின் மைந்தர்கள்


 



ஈரநிலத்தின் இரவுப் பாடல்...


கனவொன்று கண்டேன்
தோழி-நான்
கனவொன்று கண்டேன்!

கடற்கரை மணலில்
கால் பதித்து
அலையதை அழிக்காமல்
நான் பார்த்து நிற்க-நீ
அழகழகாய் வைத்து
நடந்த உந்தன்
பாதச் சுவடுகளை,

மாலைச் சூரியனின்
மயக்கும் விழிப் பார்வைக்குள்
இரவுப் போர்வை
நெருங்கும் போது
நிலவுக்கும் இரவுக்கும் சண்டையாம்,
நீ நிற்கும் போது
நிலவு வர வெட்கமாம்!

பாதத்தில் ஒட்டியிருந்த
கடற்கரை மணலை
கடல் நீரில்
கழுவி நீ வந்த போது
கடல் குளித்தெழுந்த
நிலவொன்றை நேரில் கண்டேன்-அதை
உன்னிடமும் சொன்னேன்,

அசடு வழிகிறது
ஆபத்து எனக்கென்றாய்,
கடலலைகள் கைதட்டிச் சிரித்தது, அதில்
ஒரு அலை மேலெழுந்து
உன்னைப் பார்த்துக் கொண்டது,

சரி, ஏதோ முக்கியமான
விடயம் பேச வேண்டும் என்றாயே!
நான் பேச வேண்டிய விடயங்கள்
உன்னைக் கண்டாலே
மறந்து விடுகின்றன என்பது
உனக்கு புரியுமா?

இருள் சூழ்ந்து விட்டது
இனியும் நிற்க முடியாது-நீ
கூறிக் கொண்டே வந்தாய்
நானும் ஆமோதித்தேன்

சில...
வெள்ளாப்பு பூச்சிகள்
என்னைக் கிள்ளி
உன் காதலைச் சொல் என்றது
அதை அடித்துப் புதைத்து விட,

என்ன? என்றாய்
குற்றுயிராய் கிடந்த
வெள்ளாப்புப் பூச்சி
மீண்டும்,
அதை காலால் நசுக்கி விட்டு
ஒன்றுமில்லை என்றேன்,

சரி, நடப்போம்
நடந்து கொண்டே
கேட்டேன்
நாளைக்கும் வருவோமா?

சிரித்துக் கொண்டே
ஒரு வாரமாக
இதுதானே நடக்குதென்றாய்,

மௌன இடைவெளிக்குப் பின்
வருகிறேன் என்றாய்

முட்டை உடைந்து
குஞ்சு வெளி வரும்
வேளை வந்தது!

நாளைக்காவது சொல்வானா
என்ற ஏக்கம்
அவளிடம்?

அவள் ஞாபங்களோடே...
கடற்கரை நோக்கி
நான்...
சென்று கொண்டிருந்தேன்!

ஒரு பெரும்
சுனாமியின்
பேரழிவின் பின்புதான்
புரிந்தது எனக்கு!

அவளை நான்
கடலுக்கு அறிமுகம்
செய்தது தவறென்று!

கவிஞர் அல்லையூர் சி.விஜயன்



 

 

காதலர் தினத்தில் கசிந்திடும் நினைவுகள்...

என் வீட்டுப் பூங்காவில்
எல்லாச் செடிகளும்
பூத்துப் புன்னகிக்க உன் புன்னகைப்
பூவைத்தேடுகின்றேன்...

என் இதயத்துப் பட்டாம் பூச்சிகள்
எத் திசையும் சிறகடித்துப் பறக்கிறது
உன் மேனிப்பூக்களில்
உட்கார்ந்து சுவைப்பதற்காய்...

கல்லூரி வாசலிலே உன் பார்வைக்
கயல் விழியால் சுட்டு விட்டாய்-இன்று
நான் தவிக்கும் தவிப்பு நாடு விட்டு
நாடாய் உனக்கெங்கே தெரியப்போகிறது...

ஒவ்வொரு இரவுகளும் விடியல்
ஒளிக்காய் காத்திருக்கின்றது
உன் புன்னகை வெளிச்சத்தில்
உட் பிரசவத்துக்காய்...

இன்றைய காதலர் தினத்திலே நாம்
இணைந்திட ஓடோடி வந்துடுவாய்
என்னவளே எனக்கு நீ! உந்தனுக்கு
என்றென்றும் இணைந்தவனாய்!...


கி.குமரேசன்




 

 

 

உண்மை புரியாமல் பொழுது விடியாது...


ஆழிப்பேரலை
அலையடித்து
ஓய்ந்த போது!

அகிலத்தின் பார்வையில்
தமிழர்,
அரவணைக்கும் கைகள்
கூடி வந்து...
கோடிதரும் பேச்சு!

குடிசையும் இழந்து
கோடிகளும் இழந்து
குஞ்சு குறுமான்கள்
குடுப்பம் எல்லாம் இழந்து...

வீதிக்கு விரட்டியது
விதியெனும்
பெரும் சதி!

ஆழிப்பேரலை
வந்து கரையைக்
கேள்விகள் கேட்டால்?
கரையென்ன
பதிலைக் கூறும்!

கண்ணீர்...கண்ணீர்
துளித் துளியாக
தரையே கடலாக மாறும்
அபாயம் ஏற்பட்டது
தமிழர் தேசத்தில்!

இழந்திழந்து
இழப்பதற்கு ஏதுமற்று...
ஏதிலிகளாக நின்றபோது!
எங்கள் மக்கள்
கொடுத்த கரங்களைவிட...
வேறெந்தக் கரமும்
வந்து,
கண்ணீர் துடைத்துச்
செல்லவில்லை!

கோடி தருகிறோம்
கொட்டித் தருகிறோம்
என...
விளம்பர உலகின்
வியாபார வேட்டையில்
வீழ்ந்து நொருங்கியது
தமிழர் கனவுகள்.

நிதி ஒதுக்கீட்டில்
உலக,
நீதி செத்துக் கிடந்தது
தமிழர் தேசத்தில்...

பிணந்திண்ணிக் கழுகுகளின்
ஊர்வலத்தில்-
சிட்டுக் குருவியொன்று
சிக்கித் தத்தளித்தது!

அரசும், அகிலமும்
ஆடிய ஆட்டத்தில்
மேடையொன்று...
சுடுகாடாய் மாறியது!

போதும்! போதும்!
இந்தப் பேய்களின்
கூட்டத்தில்
கேட்ட போதனைகளெல்லாம்!

உலக திசையில்...
எமது
கொடிக்கான நாள்
தேதி குறிக்கும் வரை,

கோடிகள் பற்றிய
பேச்சுக்கள் மட்டும்தான்
உண்மை...!


கவிஞர் அல்லையூர் சி.விஜயன்

 

 

     

இளவேனிற்காலம் (இத்தாலியின் குறிஞ்சி நிலம் )

   எங்கும்

   எல்லையில்லா அழகு        

   இலைகளின்றி பட்டதுபோல்

   காட்சிதந்த மரங்கள்-இன்று

    கொள்ளையடிக்கின்றன

     எமை அதன் புதுஅழகால்.

      இலைகளை முந்திடும் பூக்கள்

      இதமாய் தொடுத்த பூச்சரங்கள்

      இதயத்தை வருடும் பேரழகு

      இயற்கையின் அற்புதம் இதுவோ?

      புல்லினமும் பூப்பூக்கும்

      புதிதாய் தரைக்கு கம்பளமும் விரிக்கும்

      புத்தாடை பூண்ட இயற்கையவள்

      புன்னகைக்கும் தருணமிது.

      பச்சையழகு-ஒரு

      இச்சைதரும் அற்புத அழகு

      படர்ந்த மலைமுகடு

      பார்ப்போரை மயக்கும்

      குறிஞ்சிச்சாரலின் அற்புத வனப்பு.

     
      நாம் இங்கு வாழும் குறிஞ்சியில்
 
     நான் கண்ட அழகே இது.
 

                 அன்புடன் க.சுபாஸ்


 

 

     
புரியாத காதல் இணையாது!
 

தூணாக இருந்த
நமது காதல்
துணியாகக் கிழிந்ததேனோ
அன்பே!

வேராக இருந்த
நமது காதல்
நாராகிக் கிடந்ததேனோ
அன்பே!

பூவாக மலர்ந்த
நமது காதல்
புயலில் மாட்டியதேனோ
அன்பே!

ஒன்றும் ஒன்றும் ஒன்றாகிய
நமது காதல்
இரண்டாக கிழிந்ததேனோ
அன்பே!

இதய நரம்புகளில்
சுரக்கும் குருதியாக
கலந்த நமது காதல்.
கண்ணீர் சிந்திக்
காயம் பட்டதேனோ
அன்பே!


அகிலத்துக்கே அகரமாக
இருந்த நமது காதல்
பரிதவித்து இறந்ததேனோ
அன்பே!

அதிக பாசம்...
அதிக அன்பு...
அதிக அவஸ்தை
காதல்!

ஏதோவொரு மோகம்
ஏதோவொரு வேகம்
நான் நீயாக இருந்தேன்
நீ நானாக இருந்தாய்!

நாட்கள் நகர்ந்தது
காதல்க்கனி
கனிந்தபடியே கிடந்தது!

கனிகடிக்கும் அணில்பிள்ளை
கண் பட்டது....................

தோட்டது நிலவு
கை பட்டது இரவு!
சட்டென்று வந்தது காதல்
பொத்தென்று போனது பார்!

கலைந்து சேராத
முகில் இருந்தால்!
ஆடிய மயில் தோகை
மூடாதிருந்தால்!
பாடிய குயில்
மௌனம் கொள்ளாதிருந்தால்!
அலையடித்த கடல்
ஓயாதிருந்தால்!
சொல்லு அன்பே...
பிரிந்த நமது காதலும்
சேராது செத்து விட்டதென்று
ஒத்துக் கொள்கின்றேன் நான்...!

கவிஞர், அல்லையூர் சி.விஐயன்
 


 


 

       வாழ்க வளர்கவே!
 

நாளும் புதுப்பொலிவுடன் தோன்றும்
நம்மை
   ஆச்சரியத்தில் ஆழ்த்தும் .                           
நல்லதோர்
   இணையத்தளமாம்...எம்                    
நட்புரைக்கும்
   இத்தாலிதமிழ்.கொம்மாம்

 
அறியாத பலவிடயம் சொல்லும்.                                
அதிசயத்தில்
  மனம் திளைக்கும்.                            
அறுசுவைக்கும்
வழிகாட்டும்.                                    
அறிவுக்கும்
 களமமைக்கும்.                                                                                                                        

இத்தாலிப்பொதறிவு
மிகையில்லை எமக்கு       
இணைந்து
கொண்டால் இதனோடு                         
இயல்பாக
கொஞ்சம் சேர்ந்திடுமே!  
இலேசாக   சிலகாரியங்கள்   கைகூடிடுமே!                
                                                                                                      
வாழ்க
  என்றும்   வளர்க!                                     
பலவிடயம் இன்னும்  தருக!

                                                                                                                                                                
 அன்புடன்   .சுபாஸ்.




 

நடைபாதைப் பெருவெளியில்...
 

நடுநிசி கடந்து
நடைபாதை நீழ்கிறது
நடைபாதை தோறும்
ஞாபக மரங்கள்
பூத்துக் குலுங்குகின்றன!

அருவிகளின் உரையாடல்.
பறவைகளின் இராத்தேடல்,

மரங்கள் பேசும்
மெல்லிய ரிதப்பேச்சு!

நிலவு காய்ந்து
கொண்டிருக்கும்
வான் பரப்பில்,
விண்மீன்களின்
வக்கிரப் பார்வை!

இரண்டு கால்கள்
நடைபாதை
ஒன்று!

இருட்டின் நடுவே
இடையிடையே
மௌனம் உடைத்த
வார்த்தைகள்,
வந்து வந்து
என்னில் விழுந்தது!

மாசிப் பனி
மூசிப் பெய்தது!
முந்தானை எடுத்து
மொட்டாக்குப் போட்டாள்!

பனிக்குப் பதில்
மழையென்றால்
மனசு குளிரும்
என்றேன்!

பித்தத்துக்கு
பனி
சுத்தமென்றாள!;

இரவை இடித்து
மழை பெய்யத்
தொடங்கியது,

மெதுமெதுவாகச் சிரித்தாள்
பின்பு
சத்தம் போட்டே சிரித்தாள்!

சுத்தம் என்றேன்
இதுதான்
சுகமென்றாள்!

நடைபாதைப் பெரு
வெளியில்
நீயும் நானும்...

நடந்து
கொண்டே
இருக்கின்றோம்.

பெருத்த காற்று
பெருமழை!

எதிரிலே
ஒரு
ஒலைக்குடிசை,

தயங்கித் தயங்கி
தங்கலாமா என்றேன்!

தட்டுத் தடுமாறி
தந்தாள்
சம்மதம்.

மழை பெய்யத் தொடங்கியது
மீண்டும்,

வேயாத கூரை வழியே
மழைநீர் குளமாகியது
வீட்டினுள்,

சிரித்துக் கொண்டே
சொன்னாள்,

நடந்து போயிருந்தால்
முடிந்திருக்கும்
பயணம்!

'ம்' என்றவன்'
நடக்காது போனதால்
தொடர்கிறதே
பயணம் என்றான்!

மழை
ஓய்ந்தது
மெதுவாக!

மாதங்கள் ஆனது அவளுக்கு
மழை பற்றிய அறிவு வர...!


கவிஞர், அல்லையூர் சி.விஐயன்



 

கோரத்தாண்டவம் முடிந்த சில பொழுதுகள்...!


வானம் செந்நிறமானது!
வனம் தகனமாகி_பாலை
வனமாகிப் போனது!

மூங்கில் காடு
தீப்பிடித்து எரிந்து,
முல்லைச்செடியும்
முனகிக் கிடந்தது!

நிலவு தேய்ந்து
புலவுக்குள் வந்து
புலம்பிக் கொண்டது!

சூரியப் பார்வை
அக்னி மழை பொழிந்தது
சூனியமாகிப் போனது பூமி!

நீர் உறைந்து
காணாமல் போனது
கடல்!

கருவாடாகிக் கிடந்தது!
நீர்; இருந்த இடமெல்லாம்
மீன்!

மனித உடல்கள் பொசுங்கி
எலும்புகளின்
ஊசலாட்டம்!

ஒட்சிசன் இழந்த
காற்றில்
கந்தக நெடில்!

வரண்டு கிடந்தது!
வழியில்லாமல்
வாழ்க்கை!

வாழ்வக்காண
போராட்டத்தில்!
வல்லரசுச் சண்டை
போட்டவரெல்லாம்!


சிந்தனைகள் இழந்த
மூளை
மனித முகம்
தேடும் காலம்!

காலம் கடந்து
பெருவெளி தாண்டி,
கண்ணீர் ஆவியாகிப்
போகும் காலம்!

நீலவானம்
நிலவொளி
சூரியப் பார்வை
சுத்தமான காற்று,
சுகந்த வாசைன
இழந்த மனிதன்!

'அழித்ததை அழித்தவனே
அனுபவிப்பான்'
அசரீரி பாடியது!

அட்டத்துச் சனி
உச்சத்தில் இனி...!


கவிஞர் அல்லையூர் சி.விஜயன்
 


 

 பொங்கலில் பொங்குதுவே
  

தைத்திருநாளாம் தமிழர் பொங்கல் தனில்
தரணி எங்கும் பொங்கிடுவோம் வாரீர்
உழவன் தன் உதிரத்தை வியர்வையாக்கி
உழைத்த அறுவடையை கதிரவனுக்கு

காணிக்கை தரும் திருநாள் தனிலே
களனியில் பொங்கி தமிழ் இனம் அகிலம்
மகிழும் திருநாளாம் தைப்பொங்கல்-இன்று
தமிழ் இல்லம் எல்லாம் சிங்களம்

தாரவத்து நிற்கையிலே எம் மனம் பொங்குதுவே
உழவன் உழுதநிலம் எங்கும்
உருண்டு கிடக்குது மிதி வெடிகள்
விதி இதுதானா தமிழனுக்கு

விம்மி விம்மி உயிர்கள் மடியுதுவே
பொல்லாத மனம் படைத்த அரக்கர் கூட்டம்
பொன்னான குடும்பத்தை சிதறடித்து
இல்லம் எங்கும் இழப்புகள் விஞ்சி நிற்கையிலே

இதயம் வேதனையை வடித்து நிற்கிறதே
நல்ல தொரு நாளாம் பொங்கலன்று
நம் உள்ளம் எங்கும் வேதனையாய்ப்-பொங்குதுவே
தை பிறந்து தமிழனுக்கு என்று வழிபிறக்க-இனிய

தைப் பொங்கல் தனைப் பொங்கிடுவோம்-அன்று
எங்கள் முற்றத்தில் எழில் மிகு கோலமிட்டு
எட்டுதிசையாயவும் பட்டாசு முழங்கிட
மாவிலைத் தோரணம் தொங்கவிட்டு

மங்களகரமாக விளக்கை ஏற்றிப் பொங்கிடுவோம்.
நம்மைப் பெற்றெடுத்த தாய் நிலத்தில்
நல்ல சீரும்சிறப்புடனே
'பொங்கிடுவோம்.. பொங்கிடுவோம்

        கி.குமரேசன்
 


 

தமிழீழ தேசத்தின் உழைக்கும் மங்கை ( கடலில் )
 

கரிகாலன் தேசத்து கன்னியிவள் - இந்த

கடல் கண்டுதான் அஞ்சி நிற்பாளோ?

கரைதனிலே;  தனிமை என்ற போதிலும்,

எம் இனத்தின் எதிரி

எத்தனையெத்தனை தடை போட்டான்,

மறத்தமிழர் பணிந்து போனாரோ?

கடல் காலம் காலமாய் எங்களின் சொத்து.

உடல் தினம் நனைத்து,

திரவியம் தேடும் கடலல்லவா?

இந்தக் கடல் எங்களின் கடல்.

மங்கை ஒருத்தி கால் பதித்து - தன்

பங்கை கடலில் கேட்கிறாள்,

வாழ்க்கையின் உயிர் ஆதாரம் போக்கவே,

இவள் வாழ வந்த வாழ்வில்

இவளுக்கு யாரும் இல்லையோ?

உயிர் குடித்த போர்

இவள் அடிவேரை அறுத்ததோ?

விழுதுகள் ஒன்றும் முளைக்கவில்லையோ?

பந்தத்தில் இணைந்தவனும்

சொந்தமின்றி சொர்க்கம் எய்தானோ? அன்றி

சத்தமின்றி அடங்கிப் போனானோ?

எந்த நிலை கண்டும்

தளராத நெஞ்சுறுதி கொண்டாளிவள்.

இவள் எடுத்து வைத்த முதலடி

எம் தேசத்தின் பொருளாதாரத்திற்கு

வலுச் சேர்க்கும்.

தன்னிறைவை ஈட்டிக் கொடுக்கும்.


         க. சுபாஸ்


 

உழைப்பால் உயர்வு வரும்...


சந்தம் வந்தால்
பாட்டு எழுது!
சொந்தம் வந்தால்
பார்த்து எழும்பு!

விதை வந்தால்
நாத்தைப் போடு!
மழை வந்தால்
கூடாரம் போடு!

நீர் வந்தால்
வாய்க்கால் போடு!
திட்டி வந்தால்
தட்டிப் போடு!

கவிதை வந்தால்
பாட்டில் போடு!
பாட்டு வந்தால்
மெட்டைப் போடு!

இசை வந்தால்
இறைவனைத் தேடு!
இருட்டு வந்தால்
வெளிச்சத்தைப் போடு!

பணம் வந்தால்
பட்டினி போடும்!
குணம் வந்தால்
பட்டினி ஓடும்!

பயணம் வந்தால்
பாதை போடு!
பாதை வந்தால்
பயணம் தேடு!

நீதி வந்தால்
சட்டத்தைப் போற்று!
அநீதி கண்டால்
சட்டத்தை இயற்று!

நோய் வந்தால்
மருந்தைப் போடு!
மருந்து கண்டால்
நோய்களைத் தேடு!

மறதி வந்தால்
டயறி எழுது!
தயக்கம் வந்தால்
துணிந்து பழகு!

அமைதி வந்தால்
அரசைப் போற்று!
ஆணவம் கண்டால்
அரசை வீழ்த்து!

நண்பன் வந்தால்
குசலம் போடு!
பகைவன் வந்தால்
பாசம் காட்டு!

எதிரி வந்தால்
வீரம் காட்டு!
துரோகி வந்தால்
துரிதம் காட்டு!

பரீட்சை வந்தால்
புத்தியைக் காட்டு!
போர் வந்தால்
யுக்தியைக் காட்டு!

பயம் வந்தால்
துணிவைக் கூட்டு!
துணிவிருந்தால்
பயத்தை ஓட்டு!

வறுமை வந்தால்
உழைப்பைக் காட்டு!
உழைப்பிருந்தால்
உயர்வைக் கூட்டுமே...!


கவிஞர், அல்லையூர் சி.விஐயன்
 


    
 
புத்தாண்டே வாழ்க!
  

ஏழ்திக்கும் புகழ்பரப்பி                                        
ஏழ்மையை அகற்றி-நல்                                      
சிறப்பைக் கொண்டுவா-புத்தாண்டே!                                                     
காரிருள் கவிழ்ந்திடும் தமிழீழமதில்                            

காரிகையாய் வந்துதித்து                                     
கவலைகள் எல்லாம்                                         
காலைக்கதிரவனின் ஒளி கண்ட பனித்துளிபோல் அகன்றிடவே
ஒளி பகிர்வாய் -புத்தாண்டே!                                                                   

பழையன கழித்து-புதியன புகுந்து              
பாரினில் சமாதானம் மலர்ந்து
பாங்குடன் ஒளிர்வாய்-புத்தாண்டே!
எங்கும் ஒளிபரப்பி ஏகாந்த நிலையகற்றி

மானிடம் தழைத்திடவே
மாட்சிமை கொண்டுவா-புத்தாண்டே!
சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி
பொழிந்திடவே சுதந்திர நாயகியாய்

சரித்திரம் படைத்திடவே ஏற்ற வழிசமைத்து
மேன்நிலை தந்திடு மேன்மைமிகு –புத்தாண்டே!
ஆற்றாமை அகன்றிடவும்
ஆரணங்காள் அகமிக மகிழ்ந்திடவும்

ஈன்றெடுத்த அன்னையவள்
உவந்தேற்றி உவப்புக்கொண்டிடவும்
உத்தம ஆண்டே-உவகை கொண்டு
வந்திடுவாய்-புத்தாண்டே!

          கி.குமரேசன்  



     

  

 

ஒரு பௌர்ணமிப் பொழுது...
 

அது ஒரு
அந்திசாயும் நேரம்
அவள் அழகை,  இயற்கை
உடுத்தும் போலும்!

மெல்லிய சாம்பல்நிற
உடை அணிந்து!
மெது மெதுவாகத்தன்
தேகங்களின்
பாகங்கள் எல்லாம்
காட்டும் ஜாலம்!

பெரிசுகள் முதல்
சிறுசுகள் வரை
சில்மிசங்களில்...
நிமிடங்கள், மணித்துளிகள்
கடந்து...கடந்து போக,

அவள் அழகின்
அற்புதத் தீவு!
அணிந்திருந்த ஆடையைக்
களைந்தெறிந்து
காற்றில் விட...

மூச்சிரைத்து மூச்சிரைத்து
முதலுதவி கேட்டு
காற்று நிற்க...

மெல்லிய புன்னகை
மின்னல் போல
வந்து போக,

காற்று உயிர் பெற்ற
மகிழ்வை விட...
அவள் தொட்ட
மகிழ்வில்...
தென்றலாகி
தேடி வர,

உள்ளத்து உலை
மெல்ல மெல்ல...
உயர்விசை கொண்டு
கொதிக்க,

எண்ணமெல்லாம்...
அவள் நினைவாக,
ஏங்கி ஏங்கி
மனந் தவிக்க...

ஆடை களைந்தவள்
பொத்தென்று
கடலில் விழுந்தாள்!

அலையின் இடையே...
தலைகள் தாழ்த்தி, உயர்த்தி
அவள் நீந்தும்
அழகைக் கண்டபோது

அட,
கடலாக நான்
பிறந்திருக்கக் கூடாதா, என
மனந்துடிக்கிறது!


கவிஞர், அல்லையூர் சி.விஐயன்
 


    

தமிழே..........!!  தமிழே..........!!


எம் தாய்த் தமிழே,
சிந்தனையும் செயல்வடிவமும் பெறும் தமிழே!
உனை செவிகள் வாங்கும் போது உள்ளம் மறந்து மனம் திளைத்து
ஆனந்தம் பொங்குதே நெஞ்சினிலே.

வார்த்தைகளாய் உரைத்திடும் போதும்
நாவினில் சுவையூட்டிடும் தமிழே.
தமிழே.......  தமிழே........
எம் நாதத் தமிழே.

உடலினில் நுழைந்தாய்
உயிரினில் கலந்தாய்
உணர்வினில் வாழும் தமிழே.
தமிழே....... தமிழே.........
எம் இன்பத் தமிழே.

எம் தேசியத் தலைவரும் ஈழ்த்திலே
போற்றி நிற்கும் தமிழே,
தமிழே........தமிழே.........
எம் ஈழத் தமிழே.

இன்று ஈழ மண்ணில்
முடி சூடிநிற்கும் எம் அண்ணன் சபையில்
அரங்கேறி நிற்கும் தமிழே,
தமிழே.........தமிழே.........
எம் ஆட்சித்தமிழே,  செந்தமிழே.

மூதாதையர்(களின்) வழி நின்று
உரையாடி மகிழ்கின்ற தமிழே,
நாளை தொடரும் எம் சந்ததியும்
பேசி மகிழும் தமிழே
எம் பரம்பரைத் தமிழே.    

சேர, சோழ பாண்டியரும்
ஈழ மன்னன் இராவணனும்
ஆண்ட தமிழே,
தமிழே..........தமிழே.........

அதிகாரம் உரைத்த தமிழே.......
சிந்து நதி மீதினிலே
கவி வடித்த பாரதியும்
இராமாயணம் தந்த கம்பரும்

நல் பொருள் சொல்லும் வள்ளுவமும்
சொன்ன தமிழே, சங்கத்தமிழ் வடித்த
தமிழே........ தமிழே.........
எம் இலக்கியத் தமிழே.

பாட்டன் பண்டாரவன்னியன்
பறங்கியர்களுக்கு வீரம் உரைத்த தமிழே,
தமிழே..........தமிழே.........
எம் வீரத் தமிழே.

பண்டாவின் படைகளுக்கு
புலிப்படை தமிழ்ப்படை சொன்ன தமிழே,
தமிழே......... தமிழே.......
எம் உயிர்த் தமிழே.
 

     க.சுபாஸ்


     

மண்ணின் மைந்தர்கள்


   கார்த்திகை மாதம் கார்மேகம் மட்டுமல்ல
   எம் இதயங்களும் ஒரு கனம் கசிந்துருகும்
   தேசத்தின் விடுதலையை உயிர் மூச்சாகக் கொண்டு
   நம் தேசத்தை மீட்டெடுக்கப் புறப்பட்ட உன்னத புருஷர்கள்

----- ----- -----
 

   தமிழீழ மண்ணிலே அடிமையாய்த் தவிக்கையிலே
   தமிழர்கள் துயர் துடைக்க தரணியிலே உதித்தவரே!
   தமிழீழத்தின் இடர்களைய குயவரியாய் ஆனவரே!
   தலைவனின் வாக்கினைச் செவ்வனே உணர்ந்தவரே!

----- ----- -----
 

   சிங்களப் படையினை சீற்றத்துடன் எதிர்த்தவரே!
   செந்தனலாய் அனல் தெறிக்க எதிரியை அழித்தவரே!
   வீரத்தின் விளைநிலத்தில் விளைந்த தமிழ் மறவனே!
   வீரத்தாய் ஈன்றெடுத்த மறத்தமிழ் மைந்தனே!

----- ----- -----
 

   தமிழீழத் தாயின் விலங்கினைத் தகர்ப்பதற்காய் துணிந்தவனே!
   தன் மானத் தமிழனாய் தம் உயிரை மாய்த்தவனே!
   தலைவனின் வேதத்தை சிரம் மீது சுமந்தவனே!
   தலை முறையின் விடிவுக்காய் ஈழம் கானத் துணிந்தவனே!

----- ----- -----
 

   பிஞ்சுக் கரங்களிலே ஆயுதத்தைச் சுமந்தவரே!
   நஞ்சு மாலையினை நயத்துடன் அணிந்தவரே!
   விஞ்சிய தமிழ்த் தாகத்தால் ஊர், உறவைத்துறந்தவரே!
   வெஞ்சுடராய் என்றும் அவணியில் மிளிர்பவனே!

----- ----- -----
 

   மண்ணினை மீட்பதற்காய் மரணத்தை ஏற்றவனே!
   மாவீரனாய் உயிரை மண்ணிலே விதைத்தவனே!
   விதை குழியில் வித்தாய்த் துளிர்கின்ற மாவீரனே!
   விண்ணிலே மீனாக என்றுமே ஒளிர்பவனே!

----- ----- -----
 

   தன்னலம் இன்றிப் போரிட்ட பெரும் புயலே!
   தாய் மண்ணின் விடுதலைக்காய் வேங்கையாய் எழுந்தவனே!
   தாயக விடிவுக்காய் தன்னலம் மறந்தவனே!
   தாகம் அது ஈழம் என மண்ணில் சரண் புகுந்தவரே!

----- ----- -----
 

   வீறு கொண்டு வேங்கையாய் படை எதிர்த்த மறவனே!
   வெஞ்சிளம் பொங்கவே போரிட்ட செந்தமிழனே!
   வேட்கையது தமிழ் எனவே வெஞ்சிளம் கொண்டவரே!
   வரலாற்றில் சாசனமாய் என்றுமே திகழ்பவரே!

----- ----- -----
 

   அனையாத தீபமாய் என்றுமே ஒளிர்பவரே!
   அன்னையின் இருள்களைய ஒளி விளக்காய் ஒளிர்பவரே!
   மழையும், இடியும், புயலும், கடலும், கானகமும் இவர்களுக்குத்தோழர்கள்!
   இவர்களின் இலட்சியப் பயணத்தில் அவை கைகோர்த்தே சென்றனவே!

----- ----- -----

   இனவிடுதலை ஒன்றே அவர்களின் கனவாயிற்று-அவர்களின்
   கனவை நனவாக்கத் தலைவனும் ஆயிரம் ஆயிரம் போராளிகளும்
   இலட்சோ இலட்சதமிழ்மக்களும் அணிவகுத்து சென்றுகொண்டிருக்கிறனர்
   எங்கள் மண்ணின்மைந்தர் மாவீரர்நாமம் போற்றி,சிரம்தாழ்த்தி விடைபெறும்

 

          கி.குமரேசன்